வலியார்முன் தன்னைநினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
சரி, இந்தக் குறளுக்குப் பின்னர் வருவோம்.
பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரமாண்டுகளாக மனித சமுதாயம் பல கீழ்மையான சமூக வழக்கங்களை, அமைப்புகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது. சாதி, வருணம், பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை, அடிமை முறை என இன்னும் பல.
ஒருபிரிவினரின் சுயநலத்தின் காரணமாக, இவ்வாறு பிறப்பின் அடிப்படையில், பாலினத்தின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் மேல் கீழாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதில் மேல்நிலையில் இருப்பவர்கள் லாபமடைந்து, கீழ்நிலையில் இருப்பவர்களைச் சுரண்டிக் கொழுக்கிறார்கள். கீழே இருப்பவனின் உரிமைகளைப் பறித்து, நசுக்கிக் கீழேயே வைத்திருக்கிறார்கள். எவ்வளவு சுயநலவாதிகளாக இருந்திருக்கிறார்கள்?
பல சீர்திருத்தவாதிகளின் முயற்சியால், புரட்சியால், இவையெல்லாம் தற்காலத்தில் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், நாம் மாறவேண்டியது இன்னும் இருக்கிறது. உதாரணத்துக்கு, சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது. தீண்டாமை இன்னும் இருக்கிறது.
இவையெல்லாம் முழுமையாக மாறிவிடும்போது, நாம் முற்போக்கான சமுதாயமாக ஆகிவிடுவோமா? ஆம் .... என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையாகவா?
சரி, இன்றுள்ள கீழ்மைகள் எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்றனவா?
அல்லது, இன்று நாம் சரி என்று எண்ணுபவற்றை, அல்லது இன்று நாம் தவறு என்றே நினைக்காதவற்றை, நமக்கு ஒரு பத்துத் தலைமுறைகளுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் கேவலமானவையாக நினைத்தால்? இவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர்கள், சுயநலவாதிகளாக , பிற்போக்குவாதிகளாக நினைத்தால்? அவர்கள் அவ்வாறு நினைக்க வாய்ப்புள்ளதா?
அய்யோ, இது என்ன கொடுமை? இவ்வளவு சீர்திருத்தங்களைச் செய்து, முற்போக்காக மாறிக்கொண்டிருக்கும் நமக்கு, பிற்காலத்தில் அப்படி ஒரு அவப்பெயர் நேருமா?
ஆம். வாய்ப்பிருக்கு ராஜா, வாய்ப்பிருக்கு. சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1) சொத்துரிமை.
இன்று நாம் பெண்ணுக்கும் சொத்தில் சமஉரிமையெல்லாம் அளித்து, மிகவும் முற்போக்கானவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சமுதாயம், சொத்துரிமை என்பதையே கேவலமான ஒன்றாக நினைத்தால்? ஒருவன் தன் பெற்றோர் சம்பாதித்த வளங்களை, எந்த சொந்த முயற்சியுமே இல்லாமல், அவர்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்த ஒரே காரணத்துக்காக, அந்த சொத்துக்களை அடைவது என்பதை, அருவருப்பான விஷயமாக நினைத்தால்?
ஒருவர் சம்பாதித்து சேமித்துவைப்பது, அவரின் உணவு, நுகர்வு, குழந்தைகளை வளர்ப்பது, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக. அவரின் காலத்துக்குப் பிறகு, மீதமுள்ள அவரது சொத்துகள், அவரின் தேவைகளுக்குப் போக எஞ்சி நிற்பவை. அவை இந்த இயற்கைக்கு திருப்பியளிக்கப்பட்டு, பொதுவாகத்தான் வைக்கப்படவேண்டும், என்று நினைத்தால்?
வாரிசுரிமை என்பது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரையறைக்கு எதிராக இருக்கவில்லையா?
இன்று சாதியடிப்படையிலான, பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்படும் நாம், அதே போன்ற பிறப்பின் அடிப்படையிலான வாரிசுரிமையை மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம்?
ஏனென்றால், இதற்கு எதிராக யாரும் இன்னும் கேள்வி கேட்கவில்லை. புரட்சி செய்யவில்லை. அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் பெரிதாக எழவில்லை. நமக்குத் தோதாக இருக்கும் வரை, எல்லாம் நியாயந்தான்.
ஆனால், பிற்காலத்தில், அதற்கான சூழ்நிலை பெரிதாகும் போது, வாரிசுரிமையை வரையறுத்து வைத்திருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் செருப்பாலடித்தால்?
2) நீதி தேவதையின் தராசு
அந்தக் காலத்தில், மனுதர்மம் போன்றவற்றின் வழிகளில் நடைபெற்ற ஆட்சிகளில், ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால் அதிக தண்டனை. பிறரைக் கொன்றால் கொஞ்சம் குறைவான தண்டனை. ஒரு கொலையை ஒரு பிராமணன் செய்தால் குறைவான தண்டனை. பிறர் செய்தால் அதிகமான தண்டனை. இவ்வாறு அந்தச் சட்டங்கள், பிராமணர்களுக்குச் சாதகமாக, பாரபட்சமாக இருந்ததாகக் கேள்விப்படுகிறோம். ஏனென்றால், அவை பிராமணர்களால் இயற்றப்பட்டதால், அவர்களுக்குச் சாதகமானதாக ஆக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம்.
இன்று அந்த பாரபட்சங்கள் நீக்கப்பட்டு, எல்லாருக்கும் ஒரே நீதிவழங்கும் சட்டங்கள் வந்துவிட்டன.
ஆனால், உண்மையாகவே, எல்லா பாரபட்சங்களும் நீக்கப்பட்டுவிட்டனவா? அவ்வாறு நினைக்கிறீர்களா?
இன்று ஒருவன் இன்னொருவனைக் கொலைசெய்தால், மரணதண்டனை, அல்லது உச்சபட்ச தண்டனை. ஆனால், வேறொரு விலங்கை அல்லது பறவையைக் கொலைசெய்தால், அதே தண்டனை வழங்கப்படுகிறதா? இல்லையே. ஏனிந்தப் பாரபட்சம்? ஏனென்றால், இந்தச் சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டவை, ஆகவே, அவனுக்குச் சாதகமாகத்தான் இருக்கும். நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கொண்டு சமநீதி அளித்தாலும், முன்னால் நிற்பது மனிதனா இல்லையா என்பதை முகர்ந்துபார்த்துவிடுகிறாள்.
விலங்குகள் கேள்விகேட்பதில்லை. அல்லது, அவற்றின் கேள்விகள் நமக்குப் புரிவதில்லை, நல்லவேளையாக. ஆனால், இவை நம் கண்ணை, அறவுணர்வை உறுத்தவில்லையே? ஒருவேளை, பிற்காலத்தில் வரும் சமுதாயம், நம்மைவிட மேம்பட்ட அறவுணர்வு வாய்க்கப்பட்டவர்களானால், நம்மைக் காறி உமிழ மாட்டார்களா?
உணவுக்காகக் கொல்லப்படுவதை விடுங்கள், ஏனென்றால், கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது. நாம் பேசுவது, உணவைத் தவிர பிறவற்றுக்காகக் கொல்வதற்கான தண்டனை.
இவ்வாறு இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் பல விஷயங்கள், பிற்காலத்தில் கீழ்த்தரமாக எண்ணப்படலாம். இன்னும் பல உதாரணங்களை நீங்கள் உங்கள் மனதில் ஆராய்ந்து, திகிலடைந்து கொள்ளலாம். காசில்லாமல் திகில் படம்.
ஆனால், பிற்கால மக்கள் எல்லாருமே நம்மைக் காறி உமிழ்வார்கள், அல்லது நம் இன்றைய சட்டங்களைச் செருப்பாலடிப்பார்கள் என்ற பயப்பட வேண்டாம். ஏனென்றால், அப்போது நான்கு வகையான மக்கள் இருப்பார்கள்.
1) பழைய சட்டங்களைச் செருப்பாலடிப்பவர்கள்
2) பழைய சட்டங்களைப் புனிதாமானதாக்கி, எக்காலத்திலும் தூக்கிப் பிடிப்பவர்கள்
3) சமுதாய, வரலாற்றுப் பரிணாமப் பார்வையுடன் பழைய சட்டங்களை நோக்குபவர்கள்
4) பழைய சட்டங்களைப் பற்றி சரிவர அறியாதவர்கள்.
பிற்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் முற்காலத்திலும் கூட, இத்தகைய நான்கு பிரிவினர் இருக்கிறார்கள்.
இப்போது அந்தக் குறள்.
வலியார்முன் தன்னைநினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும். (மேலும் பொருளுக்கு, இங்கே (குறள் 250) சொடுக்கிப் பார்த்துக்கொள்ளவும். )
அதுபோல, நாம் நம் முன்னோர்களின் தவறான சட்டங்களை மதிப்பிடும்போது, நம் சட்டங்களை, நம் வருங்காலத்தினர் எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்று மனதில் நிறுத்த வேண்டும்.