செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஜெயமோகனின் யாதேவி கதையில்


ஜெயமோகனின் "யாதேவி"  சிறுகதை

https://www.jeyamohan.in/129209#.XlU5hCgzY2w



எல்லா என்ற ஐரோப்பியப் பெண் ஒருத்தி நீண்ட காலமாக பாலியல் படங்களில் பிரபலமாக இருப்பவள்,  போதைப் பொருட்களுக்கு அடிமையாகி,   நரம்புமண்டலம் நோய்வாய்ப்பட்டு,  கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையெடுத்துக்கொள்ள வருகிறாள்.   சிகிச்சையின் முதல்நாள் அவளுக்கும், ஆயுர்வேத மருத்துவன் ஸ்ரீதரனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலே கதை.


இதுவரை காமத்தின் பாலே ஆண்களை நோக்கிய,  நோக்கப்பட்ட எல்லா,   ஸ்ரீதரனையும்  அவ்வாறே நினைத்து, காமக்கரம் நீட்டுகிறாள்.   ஆனால் ஸ்ரீதரன்  வேறு வகை.

இந்தக்கதையில் ஒரு பகுதி,


“அப்படியென்றால் காமம் கொண்டிருக்கிறாய். அடக்கிக்கொண்டிருக்கிறாய்”
“இல்லை”
“நான் உன் உடலை தொட்டுப்பார்ப்பேன்”
“தேவையில்லை, என் கண்களை மட்டும் பார்த்தால்போதும்”
அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்
"நான் மருத்துவன்"


இதில்,
அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்

இந்தவரிதான்  இந்தக் கதையில் என்னை ஆட்கொண்ட பகுதி. 

அவன் எப்படிப் பார்த்தான் என ஜெயமோகன்  வெளிப்படையாக எழுதவில்லை.  இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி,  அவன் பார்த்திருக்கக் கூடிய  பார்வையை மனதுக்குள்  கற்பனை செய்து பார்க்கிறேன்.

அன்பான... கனிவான... தாய் பார்ப்பது போன்ற ஒரு பார்வை.   இல்லை... தாயினும் சாலப் பரிந்த ஒரு பார்வை.  ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்குகிற ஒரு பார்வை.

அந்தப் பார்வை அவளது மனதை நெகிழ்த்திவிடுகிறது.  வியக்கிறாள்.

அவன் இவ்வாறு இருக்க இயல்வதற்குக் காரணம் அவன் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யை விரதம் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், அந்த விரதங்கள் மட்டும் இதைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை.

பெண்களை அவன் பராசக்தியாகக் காண்பது காரணம் என்று தோன்றலாம்.

ஆனால்,  அப் பெண்ணின் இடத்தில்,  ஒரு ஆண் இருந்திருந்தால் கூட,  அந்த ஆணு க்கு இவன் மேல் பகை இருந்தால் கூட, ஸ்ரீதரனின் பார்வை  மாறியிருக்காது என்றுதான் நினைக்கத்  தோன்றுகிறது.

இந்த விரதங்கள்,  பராசக்தி, இவையெல்லாம்  அவனது இலக்குக்குப் பாதை வகுத்துக்  கொடுத்திருக்கலாம்.

அவற்றுக்கெல்லாம் மேலான,  அவனது  ஆழமான மானுட அன்பு ... அந்த  தரிசனத்தைத் தான் ஆசிரியர் சொல்லாமல் நமக்கு வழங்குகிறார்.   இப்படித்தான் இதை நான் உள்வாங்கிக்  கொள்கிறேன்.